பாடம்: 3 “என் சமுதாயத்தாரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
புஹாரி
7058. சயீத் பின் அம்ர் பின் சயீத் அல்உமவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவில் நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசலில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது எங்களுடன் மர்வான் பின் அல்ஹகமும் இருந்தார். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரின் அழிவு குறைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்.
அப்போது மர்வான், “இந்த இளைஞர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சொன்னார். உடனே அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் நினைத்தால் (அந்த இளைஞர்கள்) இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள் என்று (குறிப்பிட்டுச்) சொல்ல முடியும்” என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:)
நான் என் பாட்டனார் சயீத் பின் அம்ர் பின் சயீத் அல்உமவீ (ரஹ்) அவர்களுடன் ‘பனூ மர்வான்’ குலத்தாரிடம் அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்கு அதிபர்களான வேளையில் சென்றிருந்தேன். அவர்கள் இளம் வாலிபர்களாக இருப்பதைப் பார்த்துவிட்டு எங்களிடம், “இவர்கள் (அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த இளைஞர்களாக இருக்கலாம்” என்று என் பாட்டனார் கூறினார்கள். நாங்கள், “நீங்கள்தான் (இது பற்றி எங்களைவிட) அதிகமாக அறிந்தவர்கள்” என்று கூறினோம்.
Comments
Post a Comment